கர்ணனுக்காகக் காத்திருக்கிறேன்: பி.சி. ஸ்ரீராம் பதிவு

கர்ணன்’ திரைப்படத்துக்காகத் தான் காத்திருப்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தாணு தயாரித்துள்ளார். ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘கர்ணன்’ படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பை இந்த இரண்டு பாடல்களுமே உருவாக்கியுள்ளன.

ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் ‘கர்ணன்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்காகக் தான் காத்திருப்பதாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகிய இருவருடன் தான் உட்கார்ந்து உரையாடும் ஒரு புகைப்படத்தை பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோடு, “லேபில் (lab) எங்கள் பணிக்கு நடுவில் கிடைத்த இடைவேளையில் மாரி செல்வராஜ், தேனி ஈஸ்வர் ஆகியோருடன் சிறிய உரையாடல். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ஒரு மாற்றுக் குரல் இருந்தது, தூய்மையானதாக, எந்தவித சமரசமுமின்றி அது இருந்தது.

என் மீது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கர்ணனுக்காகக் காத்திருக்கிறேன். சொல்லப்பட வேண்டிய இன்னொரு யதார்த்தப் பதிவாக அது இருக்கலாம்” என்று பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே