“எந்த வித அரசியலும்‌ கிடையாது” 800 திரைப்படத்தின் தயாரிப்பாளர் விவேக் ரங்காச்சாரி விளக்கம்..!

ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை படமே; எந்த வித அரசியலும்‌ கிடையாது என்று ‘800’ படம் தொடர்பான சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

800 என்ற பெயரில் உருவாகும் இப்படம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை சொல்லும் படியாக உள்ளது.

800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியானது.

இதனையடுத்து இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவிற்கும் ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அரசியல், ஈழத்தமிழர்களை சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனமான டார் ப்ரோமோஷன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “800 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது.

தமிழகத்திலிருந்து தேயிலைத்தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத்தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.

இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும்; தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே