நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு,  மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

மசோதா  பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளுநர் உள்ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும்  வெளியிடவில்லை.

இதற்கிடையே, நீட் தேர்வு முடிவு வெளியிடும் முன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரியும், தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசன்னா ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுப்பள்ளி மாணவருக்கு 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவது பற்றி பிற்பகல் 2.30 மணிக்குள் ஆளுநரின் செயலர்  பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் செயலர், 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க இந்த மாதம் 28,29-ம் தேதி வரையில் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த  நீதிபதிகள், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகி விட்டது.

அரசுப்பள்ளியில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்த வழக்கு இது.

மேலும் கால அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை எனக்கூறி நீதிபதிகள், இது தொடர்பாக வரும் வெள்ளிக் கிழமைக்குள் (16-ம் தேதி) முடிவு எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே