விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல – ஹெச்.ராஜா

திமுக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்று வருகிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை கே.கே நகரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுகவும் அதனுடைய இலவச இணைப்புகளும் சேர்த்து தமிழகத்தில் மத ரீதியான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

ஒரு மசோதாவை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ வாக்களிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு.

எம்.பி ரவீந்திர நாத் மீதான தாக்குதல் கண்டிக்கதக்கது என்று ஹெச்.ராஜா கூறினார். 

சீமான் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டியதோடு, இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர் என்றார்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விதிமுறைக்கு புறம்பாக நடந்த கோவில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா, திமுகவுக்கு அறிவு இல்லாததால் பிரசாந்த் கிசோரை அழைத்து வந்துள்ளது என்று விமர்சித்தார்.

மேலும், ஸ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த பொட்டை அழித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்து கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் எனச் சொல்பவர்கள், பள்ளிவாசலில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறிய பெரியார் தமிழின துரோகி என்று விமர்சித்தார்.

நெய்வேலியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் ஏற்கனவே விபத்து நடந்ததால், விஜய் படப்பிடிப்பு நடத்த கூடாது என சொல்கிறோம் என்றார். மேலும், விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறிய ஹெச்.ராஜா, மோடி பிரதமராக பொற்றுப்பேற்ற பின்னர் இலங்கையில் ஒரு தமிழர் கொல்லப்படவில்லை என்றார்.

மேலும், வருமானவரித்துறை சுயட்சையாக செயல்பட்டு வருகிறது என்றதோடு, சினிமாத்துறையில் கருப்பு பணம் உள்ளது என்று ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.

அதோடு, சரஸ்வதி நதி இருந்தது நிரூபிக்கப்பட்டது என்றும், கால போக்கில் மறைந்து விட்டது என்றும் கூறினார்.

கீழடியில் அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஹெச்.ராஜா, மக்கள் இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து உள்ளனர் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே