இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ ஆர்ப்பாட்டம் – கைது

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை எதிர்த்து டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவிவிலகியதால், கோத்தபயவின் சகோதரர் மகிந்தா ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.

அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 2 நாள் அரசுமுறை பயணமாக கோத்தபய ராஜபக்ச இன்று மாலை டெல்லி வருகிறார்.

மாலை 5-30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வரும் கோத்தபயவுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VAIKO ARRESTED

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் நாளை சந்தித்துப் பேசும் கோத்தபய ராஜபக்சே, நாளை மறுதினம் மாலை இலங்கைக்குப் புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சயின் வருகையை எதிர்த்து டெல்லியில் மதிமுக சார்பில் போராட்டம் நடந்தது.

வைகோ தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து முழக்கமிட்டனர். இந்நிலையில் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே