கரோனாவிலிருந்து தப்பிக்க ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி: ராஜீவ் சுக்லா திட்டம்

ஐபிஎல் தொடரில் வீரர்கள் கரோனாவிலிருந்து பாதிக்கப்படாமல் தடுக்க அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்குள் டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல், கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மும்பையில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அங்கு சிஎஸ்கே அணி மோதும் லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பயோ-பபுள் சூழலுக்குள் வீரர்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று ஏற்கெனவே பிசிசிஐ தெரிவித்துவிட்டதால், வீரர்கள் தொற்றிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், பாதிப்பிலிருந்து வீரர்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதுதான் என்று நினைக்கிறேன்.

வீரர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாது என்று பிசிசிஐ சிந்தித்தாலும், தற்போது தடுப்பூசி தேவை என்று நினைக்கிறது. எப்போது கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது. அதற்கு காலக்கெடுவும் வழங்க முடியாது. கரோனா வைரஸ் அச்சத்தை வைத்துக்கொண்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது. ஆதலால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக விரைவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் பேசி பிசிசிஐ முடிவு எடுக்கும்”.

இவ்வாறு சுக்லா தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையில் நடக்கும் லீக் ஆட்டங்களை இடம் மாற்றவும் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானப் பராமரிப்பு ஊழியர்கள் 10 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அங்கு போட்டியை நடத்துவது வீரர்களின் பாதுகாப்புக்கு உகந்ததா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்காக மாற்று இடங்களாக ஹைதராபாத், இந்தூர் ஆகிய இடங்களைத் தேர்வு செய்து ஆலோசித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே