சீருடை பணியாளர் தேர்வு : தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தியது.

இதில், வேலூரில் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் சிகரம் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும் புகார் எழுந்தது.

முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டார்.

தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னரும், அரசின் விளக்கத்தை கேட்காமலும், தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது.

ஒரே தேர்வு மையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றார்கள் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இத்தகைய குற்றச்சாட்டு பொத்தம் பொதுவாகக் கூறப்படுவதாகவும், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி தேர்வு நடவடிக்கையை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தேர்வு முறைகேடு குறித்து ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு என்றும், இது தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைத்ததற்கு எந்த காரணத்தையும் தனி நீதிபதி தன்னுடைய உத்தரவில் விளக்கவில்லை என்பதையும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தமிழக அரசின் மேல் முறையீட்டை அனுமதிப்பதாகவும், தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டனர்.

மூல வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே