இராமநாதபுரத்தில் சமமான வாக்குகள் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள்

இராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், இரண்டு வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்றதால், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, சுயேட்சை வேட்பாளர்களாக பஞ்சவள்ளி, சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், இருவரும் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அதிலும் இருவரும் சமவாக்குகள் பெற்று இருந்ததால், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளராக சரஸ்வதி தேர்வுசெய்யப்பட்டார்.

இதற்கு மற்றொரு வேட்பாளர் பஞ்சவள்ளி அதிருப்தி தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைப்படி இருவரின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே