இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கனமழையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி்ல், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் அதி கனமழையால், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் 3ம் நாளாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றைய நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 26-ஆக இருந்தது.
இன்று காலை 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.