விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு விபத்து குறித்து தில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
விசாகப்பட்டினத்தில் தற்போதைய நிலை குறித்து அவர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.
இந்த விஷவாயு அங்கு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பரவியதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலை இருக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில் தீயணைப்புபடையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.