அடுத்த 24 மணிநேரத்தில் கோவை , நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகயில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர்,திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.