சென்னைக்கு வரும் பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு..!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் பல்வேறு இடங்களில் திடீர் போராட்டம் நடத்தியதால், பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த போராட்டம் இன்று சென்னையில் தொடங்குகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி பாமகவினர் வாகனங்களில் திரண்டு வந்தனர். 

அவ்வாறு வந்தவர்களை போலீசார் சென்னை சிட்டிக்குக்குள் விடாமல் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தினர்.

முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இதனால், போலீசார் , பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் பாகமவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், பாமக போராட்டம் காரணமாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் அவஸ்தை அடைந்துள்ளனர்.

பேருந்துகள் மட்டுமின்றி, ஆங்காங்கே மின்சார ரயில்களையும் பாமகவினர் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அலுவலகம் செல்வோர் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி சென்னையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே