மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்திய பெண் ஊழியரின் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி கொடுமையாக தாக்கியுள்ளார் அதிகாரி ஒருவர்.
ஆந்திரப்பிரதேச சுற்றுலாத்துறையின் ஹோட்டல் ஒன்று நெல்லூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
அங்கு துணை மேலாளராக பணிபுரிந்துவருகிறார் பாஸ்கர் ராவ்.
அவர், அங்கு பணிபுரியும் உஷாராணி என்ற சக ஊழியரிடம் பேசச்சென்ற போது மாஸ்க் போட வேண்டும் என்று உஷாராணி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் ராவ், உஷாராணியின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், நாற்காலியின் கைப்பிடியை வைத்து உஷாராணியின் தலையில், முதுகில், முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், பாஸ்கர் ராவை சமாதானம் செய்ய முயல்கின்றனர்.
இந்த சம்பவம் ஜூன் 27ம் தேதி நடந்த நிலையில் தற்போது அதன் சிடிடிவி காட்சிகள் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உஷாராணியை கடுமையாக தாக்கிய அதிகாரி மீது அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் முன்விரோதம் காரணமாகவே பாஸ்கர் ராவ் தன்னை தாக்கியதாகவும் பலர் முன்னிலையில் தகாத வார்த்தையில் பேசி திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், உஷாராணி குறித்து பாஸ்கர் ராவ் அவதூறு பரப்பியதாக உஷாராணியும் அவரது கணவரும் பாஸ்கர் ராவை திட்டியதாக கூறப்படுகிறது.
எனினும் காவல்துறையினர் தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.