ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார் என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தின் விசாரணை குறித்து உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கை கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சியான பெண் தலைமை காவலர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன.
பெண் தலைமை காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகவும் அச்சத்துடன் இருந்தார்.
சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டனர்.
லத்தி மற்றும் மேசையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.
அங்குள்ள ஒரு காவலரிடம் லத்தியை கேட்டபோது அவர் எகிறி குதித்து அங்கிருந்து தப்பிவிட்டார்.
காவலர் மகாராஜன் என்னிடம் இல்லை, அது என் அறையில் இருக்கிறது, ஊரில் வைத்து விட்டேன் என்று மாறி மாறி கூறிய பிறகு தான் நிர்பந்தத்தின் படியே அவர் லத்தியை கொடுத்தார்.
விசாரணையை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பும் அளவிற்கு போலீசார் அச்சுறுத்தல் தந்தனர்” என தெரிவிக்கப்பட்டள்ளது.