சாப்பிடுவது ஒரு வேலையல்ல, அத்தியாவசியம்; இன்று உலக உணவு தினம்.

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்யவேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட சக்தியை நாம் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த சக்தி உணவு உட்கொள்வது மூலமே உடலுக்கு கிடைக்கிறது.

வாகனங்களுக்கு எரிபொருள் எப்படியோ, அதே போலத்தான் உடலுக்கு உணவும்.

ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது.

அத்தியாவசியம் என்பதை மறந்து, போகிற போக்கில் செய்கிற காரியம் ஆக உணவு உட்கொள்வதை கொண்டு வந்துவிட்டோம்.

வேலை பளு காரணமாக சாப்பிடவில்லை என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போகிறவர்களும் உண்டு.

உணவு குறித்தும், ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பு நாடுகள் 1971 ஆம் ஆண்டு உணவு தினத்தை நிறுவி அதனை வருடம்தோறும் கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு 1980 ஆம் ஆண்டு ஐ.நா ஒப்புதல் அளித்தது. அதன்படி 1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நமது செயல்பாடுகளே நமது எதிர்காலம்;

நமது செயல்பாடுகளே நமது எதிர்காலம்; பசியற்ற உலகிற்கு, ஆரோக்கியமான உணவுகள் என்ற மையக் கருத்துடன் இந்த ஆண்டு கால உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக அளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அதாவது ஒன்பதில் ஒருவர் பசியில் இருக்கிறார். மூன்று பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை அளிக்கிறது புள்ளிவிபரம்.

ஒருபுறம் உணவின்றி ஒருசாரார் தவித்து வரும் நிலையில், மறுபுறம் உணவு வீணாக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

நகரமயமாதல் போன்ற காரணங்களால் விவசாயம் அழிந்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

குறைந்த காலங்களில் அதிக மகசூல் வேண்டி இயற்கைக்கு எதிராக உணவுப் பொருட்களை விளைவிப்பதும், உணவு விஷமாகும் ஆபத்துதான் எனவும் கூறப்படுகிறது.

ஆரோக்கியமான உணவு என்பது அளவை பொருத்து இல்லை எனக் கூறும் மருத்துவர்கள், வயிறு முட்ட ஊட்டச்சத்து இல்லாத உணவு உண்பதைக் காட்டிலும், சீரான இடைவெளியில் ஊட்டச் சத்தான உணவை உட்கொள்ளுதலே பயன் தரக்கூடியவை என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவு. ஆனால் வயிற்றை நிரப்பி பசியை போக்க மட்டுமே உணவு என்ற நிலை வந்து விட்டதாகவும், இதுவே ஊட்டச்சத்து குறைவான தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள்

காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் என ஊட்டச்சத்து அதிகம் இருக்கும் இயற்கை உணவுகளை உட்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், நொறுக்குத்தீனிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுதல் போன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது ஆரோக்கியமான உடலுக்கு சரியாக பொருந்தக்கூடிய பழமொழி.

உடல் ஆரோக்கியமே நம்முடைய வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுக்கு உந்துசக்தியாக இருக்கின்றன.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மூலம் ஊட்டச்சத்தான தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதை உணவு தினத்தின் மைய கருத்து.

அதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதே உணவு தினத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே