மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

தேச பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுக்கவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே