TNPSC முறைகேடு: சித்தாண்டி உள்பட மேலும் 4 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்ட நிலையில்,  லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைகேடாக அரசுப் பணியில் சேர்ந்த மேலும் 4 பேர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூரைச் சேர்ந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, தேர்வர்களிடம் 13 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, தலைமறைவாக இருந்த சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி முடக்கியது.

சித்தாண்டியின் உறவினரும், தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலருமான முத்து என்பவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இதேபோல, தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் 12 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் பென்டிரைவ் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முறைகேட்டில் தொடர்புடைய நபர்களிடம் ஜெயக்குமார் தன்னுடைய செல்போன் மூலம் பேசியதில்லை என்றும், ஓட்டுநர் உள்ளிட்ட பிறரின் செல்போன்கள் மூலமே தொடர்புகொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவன் எங்கு பதுங்கியுள்ளான் என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி உள்ளிட்ட 25 பேரில், தேர்வு முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 8 பேரிடம் சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் அவர்களில் தலைமைச் செயலக நிதித்துறையில் பணியாற்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தீபக், வேலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை சேர்ந்த வினோத் குமார், ஆற்காடு வணிகவரித்துறையில் பணியாற்றும் செய்யாரைச் சேர்ந்த அருண் பாலாஜி, நாகர்கோயில் வணிகவரித்துறையில் வேலை பார்க்கும் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 4 பேரும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் முறையே 8 லட்சம் ரூபாய், 9 லட்சம் ரூபாய் மற்றும் தலா 13 லட்சம் ரூபாய் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே