டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- தேர்ச்சி பெற்றவர்கள் தலைமறைவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் 20 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முறைகேட்டில் முக்கிய நபர்களான இடைத்தரகர் ஜெயக்குமாரும், முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதான 5 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நபர்கள் செல்போன் எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டனர்? அவர்களுக்கு வெளியில் இருந்து உதவி செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை, சைபர் கிரைம் போலீசார் மூலம் சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர்.

இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து 10 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே