திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று தகவல் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டிடம் 23 ஆண்டுகள் பழமையானது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீடுகள் முழுவதும் இடிந்ததால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமோ அன்பரசன், சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் வாழ்வதற்கே தகுதி இல்லாத 23,000 வீடுகள் உள்ளன. சேதம் அடைந்த 24 வீடுகளுக்கு பதில் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய வீடுகளை கட்டித்தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் இன்று அறிவித்த நிவாரண தொகை இன்று மாலைக்குள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். வீடுகளை இழந்த குடும்பத்துக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும். பழமையான குடியிருப்புகளை தொழில்நுட்ப குழுவினர் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே