அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு இதுதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புது மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி நான்கு மாதத்திலேயே திட்டத்தை முடிக்க மின்சாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை. பொறுப்பை ஏற்று என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் திட்டம் மிகவும் மகத்தானது. விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன . இதை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்காது. 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்ததில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்புகள் தான் விவசாயிகளுக்கு தரப்பட்டன. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சியில் 82,987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1,38,592 பேருக்கும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான் ” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே