வேற்றுமையில் ஒற்றுமையே நம் நாட்டின் பலம் மற்றும் அடையாளம். இதை மெய்ப்பிக்கும் வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீக்கியர்களின் குருவான குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழா சீக்கியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் புர்காசி என்ற நகரில்,72 வயது சீக்கியர் சுக்பால் சிங் பேடி, இஸ்லாமியர்களின் புனித தலமான மசூதி கட்டுவதற்கு 900 சதுர அடி நிலத்தை வழங்கியுள்ளார்.
இந்த நிலம் தொடர்பான ஆவணங்கள் நகர பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது இந்த நில தானம் குறித்து பேசிய முதியவர் சுக்பால் சிங், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், நாங்கள் புனிதமாக கருதும் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி இந்த நல்ல காரியத்தை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
சீக்கிய முதியவரின் இந்த செயல் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு அருமையான முயற்சி என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.