தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்வுகளிலும் நேர்மை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

பிறகு எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வேலூர் மாவட்டத்தில் 1019 பேர், விழுப்புரத்தில் 763 பேர் தேர்வானதாகவும் இவர்கள் அனைவரும் ‘சிகரம்’ என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதால், மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (20/02/2020) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் அளிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும்.

குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள்?

அவர்கள் அனைவரும் எப்படி 69.5 என ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றார்கள்? எழுத்து தேர்வில் தோல்வியடைந்த இரண்டு பேர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பிவிட்டு,

இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது? தமிழர்களாகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

மேலும், தமிழகத்தில் எந்த போட்டித் தேர்விலும் நாணயம் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில் தற்போது நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறத.

தமிழர்களுக்கான நேர்மை தொலைத்துவிட்டதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்திருக்கிறார்.

கிராமப்புற மக்கள் அரசு வேலையைப் பெரிய விஷயமாக நினைப்பதாகவும், அதனால் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்ட நீதிபதி, மனு குறித்து மார்ச் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வு நடைமுறைகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படவில்லை என்றும்; இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் பார்த்தபின் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே