பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

பல்லாவரம், மதுரவாயல் வட்டங்களில் இந்த ஆண்டு நீதிமன்றம் தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் காரசாரமாக பதிலளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை பல்லாவரம் மற்றும் மதுரவாயல் வட்டங்களில் இந்த ஆண்டு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தங்கள் தொகுதிகளில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து சி.வி. சண்முகம் விளக்கமளித்தார்.

தமிழகத்தின் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சி.வி. சண்முகம், நீதிமன்றங்கள் இல்லாத வட்டங்களில் படிப்படியாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 3.58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது எனவும்; விரைவில் கட்டிட பணிகள் துவங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே