அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய கார் கொடுத்து உதவியவர்கள் எட்டப்பர்கள் என விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், சம்மந்தப்பட்டவர்கள் களை எடுக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

சென்னை மண்ணடி பள்ளியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விலை இல்லா சைக்கிள் விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவருடன் இருக்கும் யாருக்கும், அதிமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை. 

கட்சியினரைத் தவிர வேறு யாரும் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம் என்று கூறினார்.

சசிகலா திரும்பி வருவதால் ஆளும் கட்சியினருக்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவரது வருகை குறித்து பதற்றமடைய எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

தினகரன்தான் அச்சம் கொள்ள வேண்டும். பல விஷயங்கள் குறித்து சசிகலா எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

மேலும், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும்; கட்சித் துண்டு போட்டவர் எல்லாம் கட்சி உறுப்பினராக முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சசிகலாவின் வருகையால் தங்களுக்கு எந்த பயமும் இல்லை என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் B டீம்தான் சசிகலா என விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே