அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கனிமொழி பதிலடி..!!

திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை என சசிகலா விவகாரத்தில் அதிமுக முன்வைத்த விமர்சனத்திற்கு திமுக எம்.பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.

மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கூட்டுறவு வங்கி கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்துள்ளது. அதேபோல் வங்கி கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்’ என்றார்.

சசிகலா திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி ‘திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை. அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது.

உடல்நலம் குறைவான அம்மையாரை அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தளபதி முதல்வராவார். அதிமுக செய்யாதவற்றை செய்ததாக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம்.

திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணிகள் தொடரும். அப்படி ஏதாவது மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும்.

பிஜேபியுடன் கூட்டணியில் இருப்பது தவறு என்று அதிமுக எண்ணுகிறது’ எனத் தெரிவித்தார்.

மேலும், அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் எடுப்பார் எனவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே