முகநூலில் பழகிய காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மலேசிய கோடீஸ்வரி

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

முகநூல் வழியாக அசோக்குமாருக்கு மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண் பழக்கமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் சில மாதங்கள் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அசோக்குமாரைச் சந்திக்க அமுதேஸ்வரி தேனிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அசோக்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அமுதேஸ்வரி 45 வயதான பெண் என்பது அசோக்குமாருக்குத் தெரியவந்தது. இவ்வளவு வயது வித்தியாசத்தில் காதலே வேண்டாம் என அசோக்குமார் தெரிவித்து விட்டார்.

மனமுடைந்த அமுதேஸ்வரி மலேசியா திரும்பிச் சென்றார். அமுதேஸ்வரி உடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அசோக்குமார்.

சில மாதங்கள் கழித்து கவிதா அருணாச்சலம் என்ற பெயரில் ஒரு பெண் அசோக்குமாரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

தான் அமுதேஸ்வரியின் சகோதரி என்றும், அசோக்குமார் நிராகரித்ததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அமுதேஸ்வரி ஒரு வீடியோ வெளியிட்டதாக கூறிய கவிதா அந்த வீடியோவை அசோக்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வீடியோவில் கைநிறைய வளையல்களையும், கழுத்து நிறைய நகைகளையும் அணிந்தபடி தோன்றும் அமுதேஸ்வரி, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதால் இப்படி வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

கவிதா சொன்னதை உண்மை என நம்பிய அசோக்குமார், தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கவிதா தான் தேனிக்கு வருவதாகவும் தன்னை வந்து பார்க்கும்படியும் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் தேனிக்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக அசோக்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அசோக்குமார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட அமுதேஸ்வரி தான் அங்கு இருந்துள்ளார்.

உன்னைச் சந்திக்கத்தான் பொய் சொல்லி வரவைத்தேன். என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

பயந்து போன அசோக்குமார் தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

போலீசார் விசாரணையின் போது, தான் மலேசிய காவல்துறையைச் சேர்ந்தவர் என அமுதேஸ்வரி நாடகமாடியுள்ளார்.

தொடர் விசாரணையில் அமுதேஸ்வரியின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பது தெரியவந்தது.

மேலும் விக்னேஸ்வரிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார் என்பதும் கணவரைப் பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரியவந்தது.

மலேசியாவில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வரும் அமுதேஸ்வரி பெரிய கோடீஸ்வரி என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

புகாரி்ல் முகாந்திரம் இல்லை என போலீசார் அறிவுறுத்தியும் கேட்காத அமுதேஸ்வரி வீரபாண்டி காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளித்தார்.

அசோக்குமார் மீது வழக்குப் பதிவு செய்தால் தான் மலேசியா செல்வேன் என அமுதேஸ்வரி அடம் பிடித்துள்ளார்.

அதையடுத்து அசோக்குமார் மீது, ஆபாசமாகப் பேசி தொந்தரவு செய்தல் என்ற பிரிவின் கீழ் நவம்பர் 1ம் தேதி வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து அமுதேஸ்வரி மலேசியா சென்று விட்டார்.

இந்த நிலையில் போடி நகர் பகுதியில் தனியார் விடுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்களுடன் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் தனியார் விடுதிக்கு சென்று சோதனையிட்டதில் ஒரு அறையில் ஆயுதங்களுடன் இருந்த அன்பரசன், முனியசாமி, அய்யனார், திருமுருகன், ஜோசப் உள்ளிட்ட 9 பேர் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள் மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் எனத் தெரியவந்தது.

கூலிப்படையினரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள அமுதேஸ்வரியைப் பிடிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

28 வயது காதலனை கொலை செய்வதற்கு 45 வயது மலேசிய பெண் கூலிப்படை அனுப்பிய சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே