10 வருடங்களில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்!

உத்தர பிரதேசம் காசியாபாத்தில் ஒரு பெண், கடந்த 10 வருடங்களில் 8 வயதானவர்களை திருமணம் செய்து அவர்களுடைய நகை, பணம் மற்றும் சொத்துக்களை சூறையாடி சென்றுள்ளார்.

காசியாபாத் காவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 66 வயதான கட்டுமான ஒப்பந்தக்காரர் ஜுகல் கிஷோர்.

இவருடைய மனைவி இறந்த பிறகு தனது மகனைவிட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார்.

ஒரு வருடம் கழித்து டெல்லியைச் சேர்ந்த ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

அதில் மூத்த குடிமகன்கள் மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கு சரியான துணை கிடைக்கும் என விளம்பரப்படுத்தி இருந்தனர்.

கிஷோர் ஏஜென்ஸியைத் தொடர்புகொண்டபோது உரிமையாளர் மஞ்சு கண்ணா, மோனிகா மாலிக் என்ற பெண்ணை அறிமுகம் செய்திருக்கிறார்.

அந்த பெண் விவாகரத்து ஆனவர் என்றும், அவர்தான் சிறந்த ஜோடி என்றும் கூறி 2019 ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

திருமணமாகி சில வாரங்களிலேயே அதாவது 2 மாதத்திலேயே அக்டோபர் 26ஆம் தேதி அவரிடம் இருந்த 15 லட்சம் பணம் மற்றும் நகைகளை சுருட்டிக்கொண்டு மோனிகா தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து ஏஜென்ஸியின் உரிமையாளரான மஞ்சு கண்ணாவை தொடர்புகொண்டபோது, இதுபற்றி வெளியே கூறினால் பொய் வழக்குப் பதிவு செய்துவிடுவதாகவும், மேலும் பணம் கொடுக்கும்படியும் மிரட்டியிருக்கிறார்.

ஆனால் மோனிகாவின் முந்தைய கணவர்கள் பற்றியும், அவர்களை ஏமாற்றிய விதம் பற்றியும் கிஷோருக்கு பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

மோனிகா 10 வருடங்களில் மூத்த குடிமகன்கள் 8 பேரை திருமணம் செய்ததாகவும், அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் விலைமதிப்பற்ற பல பொருட்களை திருடிச்சென்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனைத்து திருமணமுமே மஞ்சு கண்ணா தலைமையில் நடந்ததால் இது ஒரு மேட்ரிமோனியல் மோசடி என கண்டறியப்பட்டு மஞ்சு கண்ணா மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே