திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் ஆறாம் நாள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலையில் 32 அடி உயர தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுவாமி எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் வைபவம் நடைபெறுகிறது.  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகத்துடன் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை திரேதா யுகத்தில் ராமருக்கு சேவை செய்த பக்தனான அனுமனின் சேவையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் மலையப்பசுவாமி, அனுமன் வாகனத்தில், ராமர் அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஆடியபடியும், சுவாமி அவதாரங்கள் போல் வேடமிட்டு நடனமாடியும் வீதி உலாவில் பங்கேற்றனர்.

மாட வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாயார்களுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாடவீதியில் வலம் வரும் வைபவம் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே