கோவாக்சின் 2-ம் டோஸுக்காக அலைக்கழிக்கப்படும் சென்னை மக்கள்..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதிகமாக மக்கள் பாதிக்கப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாக உள்ளது.

தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், சென்னையில் மட்டுமே 3 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகிறது. கடந்த ஆண்டைப் போலவே சென்னையில் தற்போது பாதிப்பு அதிகரித்திருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ள, தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இதனால், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அபிராமபுரத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அப்பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் வரிசையில் காத்துக் கிடந்துள்ளனர்.

வெகுநேரம் ஆகியும் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது.

3 நாட்கள் கழித்து வருமாறு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே