தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண்கள் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 9 பேர் இறந்துள்ளனர் என்றும் குருங்குடி கிராமத்தில் வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும், இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது.
தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு என்று கூறியுள்ளார்.