உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!!

இந்தியாவில் ஏற்கெனவே 6 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவிய நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்தது.

மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அந்த கொரோனா மாதிரிகள் அனைத்தும் கொல்கத்தா, புவனேஸ்வர், புனே, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள சிறப்பு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

அதில், 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட அந்த நபரை தனி அறையில் வைத்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே