மாநில அளவில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்தி தவறு – தமிழக அரசு விளக்கம்..!!

மருத்துவ கல்லூரிகளில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தமிழக் அரசு திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட விளக்க அறிக்கை:

இன்று மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர். இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும் அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை முதல்வருடன் ஆலோசித்து மத்திய அரசுக்கு தெரிவிப்பதாகவும் கூறினார்.

இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்துக்கு நீட் (NEET) தேர்வு கூடாது என்றும் வழக்கம் போல 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அள்வில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது.

தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே