நடப்பாண்டு நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், பல் மருத்துவத்திற்கும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அதனை கைவிட வேண்டும்.
முதல்வர் பழனிசாமியும் நீட் தேர்வை கைவிட வேண்டும், மாநில வழிமுறைகளின்படி மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடந்த சில மாதங்களாக கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போராடி வருகின்றன.
இந்த நிலையில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
பாதுகாப்பு உபகரணங்களுடன் தேர்வை நடத்தினாலும், பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெருந்தொற்று பரவி வரும் காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதும் சவாலான பணியாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்” இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.