பணியிட நட்பின் அடிப்படையில் நண்பனை வீட்டில் விட்டதற்கு, குடும்பமே காவல் நிலையத்தில் சிறைக்கைதிகளாக காத்திருக்கும் சோகம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் சிதம்பரம் வ.உ.சி நகர் பகுதியை சார்ந்தவர் அன்பழகன்.
இவனது சடலமானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அங்குள்ள அரங்கநாதன் நகரில் வசித்து வரும் 10 ஆம் வகுப்பு சிறுமியின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியின் இல்லம் திறக்கப்பட்டு இருந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் சடலத்தை பார்த்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சடலத்தை மீட்கும் நேரத்தில் சிறுமியின் இல்லத்தில் ஆட்கள் யாரும் இல்லை.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் தந்தை கொத்தனாராக பணியாற்றி வந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கும், அன்பழகனிற்கும் பணியிட நட்பு இருந்து வந்துள்ளது.
இதன் அடிப்படையில், அன்பழகன் அவ்வப்போது சிறுமியின் வீட்டிற்கு வந்த நிலையில், சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளான்.
இவனது வார்த்தைகளில் விழுந்த 15 வயது சிறுமியும் பழகி வந்த நிலையில், அன்பழகனிற்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது.
நாளடைவில் அன்பழகனின் நடவடிக்கை சிறுமிக்கு வெறுப்பை ஏற்படுத்த, சிறுமி அன்பழகனிடம் இருந்து விலக துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அன்பழகன் மற்றும் சிறுமி குறித்த விவகாரம், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் சிறுமியின் சகோதரருக்கு தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சிறுமியுடன் தனிமையில் எடுத்த புகைப்படத்தை காண்பித்து காமுகன் அன்பழகன் மிரட்ட துவங்கிய நிலையில், இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.
15 வயது சிறுமி, சிறுமியின் தாய், தந்தை, சகோதரர் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அன்பழகனின் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள்ளே கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தது சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.