தந்தையின் விருப்பத்திற்காக சிலையை திருமணம் செய்த இளைஞர் …!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அவரது தந்தையின் மகிழ்ச்சிக்காக ஒரு சிலையை மணமுடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் குர்பூர் கிராமத்திலுள்ள பைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ மோகன்பால். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு 9 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் 8வது மகனான பஞ்ச் ராஜ்-ஐ தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

பஞ்ச் ராஜ்-க்கு சற்று மனநிலை சரியில்லாததால், இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த மோகன்பால், வித்யாசமான முறையை பின்பற்றினார். அதாவது, சிலையுடன் மகனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

இது குறித்து மோகன்பால் கூறியதாவது: எனது மகன் சற்று மனநிலை பாதித்ததால் அவனுடைய சின்ன சின்ன வேலைகளை செய்வதற்கு கூட பிற நபர்களின் உதவித் தேவைப்படுகிறது. அதனால் அவனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்வை நான் சீர்குலைக்க விரும்பவில்லை.

ஆனால் அதேசமயம் எனது குடும்பத்தில் இவன் மட்டும் திருமணமாகாதவனாக இருப்பதையும் நான் விரும்பவில்லை. பூசாரிகளின் அறிவுரைப்படி அவனுக்கு ஒரு சிலையுடன் திருமணம் நடத்தி வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.

முதலில் மறுத்த பஞ்ச்ராஜ், பின்னர் எனது மகிழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டான். மற்ற குழந்தைகளுக்கு எப்படி திருமணம் நடந்ததோ, அதே போல பஞ்ச் ராஜ்-க்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். எங்களது மதச் சடங்குகளின் படி பஞ்ச் ராஜ்ஜை வீட்டிலிருந்து அழைத்து, மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். திருமணத்தில் இசைக்கப்பட்ட பாடல்களுக்கு நடனமும் ஆடினான். மந்திரங்கள் ஓதப்பட்டு ராஜ்-க்கும் சிலைக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே