உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்?.. இதை படியுங்கள்!..

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா. கண்டிப்பாக கிடையாது நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் அமைதியாக நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை. கைக்கு கிடைத்ததை வாய்க்கு போட்டு விட்டு ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

உடல் நலன் பாதிப்பு

இளம் வயதிலேயே உடல் பருமன், விட்டமின் பற்றாக்குறை, போதிய சீரணமின்மை, வாய்வுத் தொல்லை, வயிறு பிரச்சனைகள் இன்றும் நிறைய பிரச்சனை களை அடுக்கிக் கொண்டே போகலாம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அவசர அவசரமாக எதாவது ஒரு வேலையை செய்தால் அது சரியாக நடைபெறுமா கண்டிப்பாக நடக்காது. அது மாதிரி தான் நீங்கள் சாப்பிடும் சாப்பாடும். வேக வேகமாக சாதத்தை உள்ளே தள்ளினால் என்னாகும் மூளைக்கும் நம் செரிமான உறுப்புக்கும் என்ன புரியும். உணவு ஒழுங்காக சீரணிக்குமா கண்டிப்பாக கஷ்டம் தான்.

இதை விஞ்ஞான ரீதியாக கூட நிரூபித்து உள்ளனர். வேகமாக சாப்பிடுவது ஒரு நபரின் மன, உணர்ச்சி மற்றும் உடல் நலனில் பல சிக்கல்களை உருவாக்கும் எனவும் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வேகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகின்றன, எப்படி சரியான முறையில் சாப்பிட வேண்டும் என்பதை தெரிஞ்சுக்கலாம். கொழுப்பு சாப்பிடுவது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும் நீங்கள் உணவுகளை மென்று சாப்பிடாமல் விழுங்கும் போது சீரண உறுப்புகள் அதை உடைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதனால் உங்களுக்கு செரிமான சிக்கல்கள் உண்டாகும். எனவே சாப்பிடும் போது பற்களால் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

​​உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது

உணவை செரிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான வேலை. நமது உமிழ்நீர் உணவை எளிமையான சர்க்கரைகளாக உடைக்க உதவுகிறது. பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவை செரிக்க உதவுகின்றன ஆனால் நீங்கள் நன்றாக மென்று சாப்பிடாத போது உணவை செரிப்பது பெரிய வேலையாக மாறுகிறது. இதனால் அதிகளவு அமிலம் சுரக்கிறது. அதிகளவு அமில சுரப்பதால் நம்மளுக்கு பசியும் அதிகரிக்கிறது. இதனாலயே தேவையில்லாமல் சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. உங்க உடல் மெட்டாபாலிசமும் குறைவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

​​மூளை சிக்னல்கள் சரியாக இருப்பதில்லை

நமக்கு ஏற்படும் பசி, சீரணம் எல்லாவற்றிற்கும் மூளை சிக்னல்கள் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பி விட்டது என்ற திருப்திகரமான சிக்னலை பெற மூளைக்கு 20 நிமிடங்கள் ஆகின்றன. எனவே உணவை நீங்கள் மெதுவாக மென்று சாப்பிடும் போது மூளைக்கு சரியான நேரத்தில் சிக்னல் செல்லும். வயிறு நிரம்பி விட்டது என்ற சிக்னலை பெற்ற உடன் மூளை பசியை தணித்து சாப்பிடுவதை நிறுத்த சொல்லும். இதுவே நீங்கள் அவசர அவசரமாக சாப்பிடும் போது மூளைக்கு தகவல்கள் செல்லாமல் நிறைய சாப்பிட வாய்ப்புள்ளது. இதனாலும் உங்க எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

​​இதய பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் உண்டாகிறது

சரியாக சாப்பிடும் பழக்கம் இல்லாததால் ஏற்படும் உடல் எடையால் இதய பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். சரியாக மென்று சாப்பிடாத போது சுரக்கும் அதிக அமிலம் உங்களுக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்க வாய்ப்புள்ளது.

​டயாபெட்டீஸ் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது

வேகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பு மட்டுமல்லாது டயாபெட்டீஸ் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது. இதனால் உங்க இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் போய் விட வாய்ப்புள்ளது.

​​உணவை சரியான முறையில் எப்படி சாப்பிடுவது

முதலில் நீங்கள் கடிக்கும் அளவை கவனியுங்கள். உணவின் ஒரு கடியானது உங்க ஆள்காட்டி விரல் நுனியில் இருந்து நடுத்தர கோடு வரையிலான அளவாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடித்து மெதுவாக சாப்பிட வேண்டும். உணவை விழுங்குவதற்கு முன் 15 – 20 முறை மெல்ல வேண்டுமாம். அப்பொழுது தான் உணவு சிறிய துண்டுகளாக உடைக்கப்படும். உணவு வாயிலயே சிறிய துண்டுகளாக உடைக்கப்படுவதால் உங்க செரிமான உறுப்புகளுக்கு எளிதாக இருக்கும்.

​​கொஞ்சம் தண்ணீர் அருந்துங்கள்

சாப்பிடுவதற்கு முன் 2-3 மடக்கு தண்ணீர் அருந்துவது உங்க வாய் மற்றும் உணவுக்குழாயை உயிர்வூட்டுவதோடு உணவை வேகமாகவும் சுலபமாகவும் பேஸ்ட்டாக மாற்ற உதவும். அதே மாதிரி உமிழ்நீர் சுரப்பிற்கும் உதவி செய்யும். இருப்பினும் சாப்பிட்ட உடனே தண்ணீரை குடிக்க வேண்டாம். இது உங்க வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை மந்தப்படுத்தி விடும். இதனால் உணவு சரியாக செரிக்காது. எனவே 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் காத்திருங்கள்.

​​கவனமாக சாப்பிடுங்கள்

சாப்பிடும் போது மெல்லுவதுடன் அந்த உணவில் உங்க முழுமனதும் இருக்க வேண்டும். உணவில் கவனம் இருக்க வேண்டும். டீவி பார்த்து கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவின் ருசியை ருசிக்க, முகர வேண்டும். அப்பொழுது தான் உங்க மனதிற்கும் மூளைக்கும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே கவனச் சிதறல் களை தவிர்த்து உணவை சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

​​மனப்பூர்வமான சாப்பாடு

மனப்பூர்வமான சாப்பாடு தான் உங்களுக்கு ஆரோக்கியமான சாப்பாடும் கூட. ஆரோக்கியமான எளிதாக சீரணிக்க கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். முடிந்த வரை துரித உணவுகளை தவிர்த்து நன்றாக மென்று ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுங்கள். அப்பொழுது தான் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்டும். உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை குடல் உறிஞ்சும். எளிதில் சீரணம் செய்ய முடியும். உங்க குடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே