இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு பெருமகிழ்ச்சி தருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு – ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும்; ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 %-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும்; மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க குழு அமைக்க வேன்டும் என்று தீர்ப்பளித்தனர்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட தமிழக மக்களுக்குத் கிடைத்த வெற்றியாகும்!
சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.