துபையில் பணியாற்றி வேலை இழந்து அல்லது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாயகம் திரும்ப வேண்டும் என்று புறப்பட்டவர்களில் பலருக்கு வருத்தமும், குடும்பத்தை சந்திக்கப் போகிறோமோ என்ற மகிழ்ச்சியும் ஒரு சேரக் காணப்பட்டது.
இப்படி இருவேறு உணர்வுகளுடன் காணப்பட்ட ஏராளமான தமிழக மக்களை துபை விமான நிலையத்தில் காண முடிந்தது.
வெளி நாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா்.
அவா்களில் துபையிலிருந்து முதல்கட்டமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 சிறப்பு விமானங்கள் மூலம், 359 பேரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
முதல் விமானம், சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் தரையிறங்கியது. அதில் 182 பேர் வந்திறங்கினா்.
அவா்கள் அனைவருக்கும் வெப்பமானி மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவா்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.