கோவை உக்கடம் பகுதியில் வீட்டு ஜன்னலில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு விளையாடிய 9 வயது சிறுவன் கழுத்திறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் சதகத்துல்லா. இவரது மகன் காஜா உசேன். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் காஜா உசேன், வீட்டு ஜன்னலில் துப்பட்டாவை கட்டி அதன் மறு முனையில் தனது கழுத்தில் கட்டியபடி கட்டிலின் மீது விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக காஜா உசேன் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் கழுத்து இறுகி மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.