சென்னையில் ஆறாவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் ரியாஸ் (15).
இன்று பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சிறுவன் ரியாஸ் டீ விற்பதற்காக சென்றுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களிடம் டீ விற்று விட்டு 6-வது மாடியிலிருந்து இறங்கி வரும்போது தவறி கீழே விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ரியாஸ் பலியானார்.
தகவல் அறிந்து எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது மீது எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உரிமையாளர் அனுமதியின்றி கட்டிடம் கட்டி அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி அவர் மீது அஜாக்கிரைதாயக இருந்து மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.