சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றி வரும் முதல்வர் கூறியதாவது, ” கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் எனவும், எஸ்.வி சேகர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எஸ்.வி.சேகர் பிரச்சாரத்திற்கு வந்தாரா?, பாஜகவில் இருப்பதாக கூறும் அவர் பிரசாரம் செய்து யாராவது பார்த்தீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர். ” கொரோனாவுக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பவர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளோம். கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இது தவிர எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் எனக்கூறினார்.
நீலகிரி மாவட்டம் கனமழை பாதிப்பை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையின்றி பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது” என்பன உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டார்.