மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டது.
புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பின் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதனிடையே புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும்.
எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம்.
மூன்றாவது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
எனவே முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ,தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும்; இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புதிய கல்விக்கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.