பிஹார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுஷில் குமார் மோடிக்கு பதில் தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவர் பிஹார் மாநில துணை முதல்வராக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராகக் கூடும் என கருதப்படுகிறது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005ம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. 

இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று பிற்பகலில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், எம்எல்ஏ தர்கிஷோர், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, பிஹார் மாநிலத்தில் தொடர்ந்து 2-வது முறையாகவும், ஒட்டுமொத்தத்தில் 4-வது முறையாகவும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்தநிலையில் பிஹார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பிஹார் மாநில துணை முதல்வராக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்கிஷோர்

இதுகுறித்து தர்கிஷோர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டார்.

இதுகுறித்து சுஷில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ”பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருகிறேன். கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதுவரை பிஹார் மாநில துணை முதல்வராக இருந்து வரும் சுஷில் குமார் மோடியே பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே பாஜக சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக ரேணு தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராகக் கூடும் என கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே