தமிழகம் தலைநிமிர திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்: கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கை: கரப்ஷன், கலெக்சன், கமிஷன் என்று கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை அதிமுக அரசு குட்டிச்சுவராக்கிவிட்டது. கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கிய ஏழை- எளியவர்கள் உட்பட எவருக்கும் மத்திய- மாநில அரசுகள் உதவவில்லை. ஆனால், அப்போதெல்லாம் அரசு பணத்தை எடுத்து செலவு செய்யாமல், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து ஜனநாயகத்தை வீழ்த்தி விடலாம் என்று முதல்வர் பழனிசாமி நினைக்கிறார். இதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

தமிழகத்தில் அதிமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, சந்தர்ப்பவாத அடிப்படையில் அமைந்துள்ள அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காமல், தமிழகம் தலைநிமிரும் வகையில் மக்கள் நலன் சார்ந்து அமைந்துள்ள திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே