பாஜகவின் வேல் யாத்திரையை தடைசெய்ய அவசியமில்லை – தா.பாண்டியன்

கரணமடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி விடுதலை நாள் கருத்தரங்கம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (நவ. 1) நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.

முதல்வர் நாராயணசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

திமுக எம்எல்ஏ சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு செயலாளர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரி வரலாறு குறித்து எதுவும் தெரியாதவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர், டெல்லி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன பெண்மணி ஒருவர் தற்போது பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்ற காரணத்தினால் மேல் பதவி கொடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் ஆணிவேரை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி சிதைப்பதுதான் ஆளுநர் கிண்பேடியின் முழு நேர வேலையாக இருந்து வருகிறது. எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களோடு ஒத்துப்போகின்றனர்.

முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ன சொல்கிறதோ அதனை நிறைவேற்றுகின்றனர்.

ஆனால், இங்குள்ள ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தினமும் தொல்லை கொடுப்பார், முதல்வர் சொல்லும் எந்த யோசனைகளையும் கேட்கமாட்டார். ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க அனுமதி கேட்டால் கொடுப்பதற்கு இழுத்தடிப்பார்.

ஆனால், பிற மாநிலங்களில் அவர்கள் ஆட்சி செய்வது போல் தம்பட்டம் அடிப்பார்கள்.

இருந்தாலும் முதல்வர் நாராயணசாமி துணிச்சலோடு அவரை எதிர்த்து நின்று 24 மணி நேரமும் போராடிக்கொண்டிருக்கிறார்.

ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சரவைக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதன் தனித்தன்மையை பறிக்கக்கூடாது. அவ்வாறு பறித்து வரும் இந்த ஆளுநரை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும்.

அவர்கள் காமராஜர் ஆட்சி எங்களாட்சி என்பார்கள், பாரதி எங்களுடைய கவிஞன் என்பார்கள். ஆனால் பாரதி சொன்ன ஒரு வரியைக்கூட நிறைவேற்ற அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அனுமதிக்காது. இன்றைக்கு எல்லோரும் அப்பாக்களையும், பேரன்களையும் தத்தெடுப்பார்கள்.

ஆனால், தாத்தாக்களை தத்தெடுக்கின்ற வேலையில் பாஜக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் யாத்திரை போகப்போகிறோம். புதிய கொள்கைகளை அறிவிக்கப்போகிறோம் என்று சொல்கின்றனர். அவர்கள் கரணமடித்தாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது.

பாஜகவும், அவர்களோடு போட்டியிடுவோரும் தேர்தலுக்குப் பின்னர் கட்டிப்பிடித்து அழுவார்கள். எனவே, பாஜகவினால் தமிழகத்தில் எந்த அணியையும் அமைத்து அடுத்த ஆட்சி எங்களுடையது என்று சொன்னாலும், அதையும் விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் பலிக்காது.

எங்களது கூட்டணி திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக.

எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஓரணியாக நிற்கிறோம். புதுச்சேரியிலும் முழு உறுதியோடு நிற்போம். தமிழகத்தில் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டியதில்லை.

அவர்கள் எந்த இடத்துக்குப் போனாலும் அவர்களை வரவேற்க மக்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் அந்த அவமானத்தை சகித்துக்கொள்ளட்டும்” என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே