பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தில் பொய் கணக்குகள் மூலம் கையாடல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 7) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரின் வேளாண்மை நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் (Pradhan Mantri Kisan Samman Nidhi) விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில் தமிழகத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய மோசடி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகிவரும் தகவல்களைப் பார்க்கும்போது வலைப்பின்னல் போல இம்மோசடி அரங்கேறி இருப்பது தெளிவாகிறது.
ஏழை, எளிய விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய உதவித்தொகையைப் பொய் கணக்குகள் மூலம் கையாடல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்ட வாரியாக இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்றவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு இது தொடர்பான வழக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.