மே 3-ம் தேதிக்குப் பின்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கும் தமிழக மாவட்டங்கள்??

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மே 16 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கை தொடர அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் திட்டமிட்டுள்ளார்.

அதேநேரத்தில் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பின்பற்ற திட்டமிட்டுள்ளன.

சமீபத்தில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மே மாதம் 4-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். பல மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

இது தொடர்பாக விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மே 3-ம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்றும்; இங்கு ஊரடங்கு தொடரலாம் என்றும் பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட், விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கள் கண்டறிப்படும் சூழலை வைத்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்தில் இருக்கும்.

சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு உள்ளன.

ஆரஞ்சு மண்டலப் பகுதிகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக இந்தியா முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு, 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே