சூப்பர் புயலில் இருந்து கடும் புயலாக வலுவிழந்துள்ள Amphan, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்க உள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒடிசாவின் பாரதீப்புக்கு தென் கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் டிகாவிற்கு தெற்கே 225 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை கடும் புயலாக மேற்கு வங்க மாநிலத்தின் டிகா மற்றும் வங்க தேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கிடையே கரையை கடக்க உள்ளது.
அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
கடந்த 6 மணி நேரத்தில் ஒடிசாவின் வடக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் 15 முதல் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ஒடிஷாவின் பால்சூர் பகுதியில் புயலின் தாக்கம் கடுமையாக உள்ளதுடன் மழையும் பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.