ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்றம் தென்பட்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளும், நேற்று உயர்ந்தன. இதனால், பார்தி ஏர்டெல், எச்.டி.எப்.சி., ஐடிசி., ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்த கத்தின் இடையே, 700 புள்ளிகள் வரை அதிகரித்த போதும், வர்த்தகத்தின் முடிவில், 167.19 புள்ளிகள் அதிகரித்து, 30196.17 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.56 சதவீத உயர்வாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி, 55.85 புள்ளிகள் அதிகரித்து, 8879.10 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.63 சதவீத உயர்வாகும்.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிக விலையேற்றத்தை சந்தித்தன.
இந்நிறுவனப் பங்குகள் விலை, 11 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து, ஓ.என்.ஜி.சி., அல்ட்ராடெக் சிமென்ட், ஐ.டி.சி., பவர்கிரிட், என்.டி.பி.சி., ஆகிய நிறுவன பங்குகள் அதிக விலை ஏற்றத்தை சந்தித்தன.
மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி., எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவை சந்தித்தன.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வர்த்தகர்களிடையே நம்பிக்கை அதிகரித்தது. இது சந்தை உயர வழிவகுத்தது.