உள்ளாட்சி தேர்தல் முடிவுககளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையிலான பதவிகளுக்கான போட்டியில் மொத்தம் நான்கு முனைப் போட்டி நிலவியது.

இதில் அதிமுக கூட்டணி மொத்தம் 435 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு 214 பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.  

திமுக மொத்தம் 416 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு 243 பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. 

தனித்து களம் இறங்கி 498 இடங்களில் போட்டியிட்ட அமமுக ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் வெல்லவில்லை.

இதே போல் தனித்து களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி, 364 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை.

பாஜக மொத்தம் 81 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 74 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களிலும், மதிமுக 10 இடங்களில் போட்டியிட்டு 1 மாவட்ட கவுன்சிலர் இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் 23 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களிலும், பாமக 36 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களிலும் வென்றுள்ளன.

24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட தேமுதிக 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது, தமாகா 6 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வென்றுள்ளது.

சுயேட்சைகள் 3 பேர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே